Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு; திராவிட மாடல் அரசு தொடர்வதற்கு அடித்தளமாக நிர்வாகிகள் சந்திப்பு அமையும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இளைஞர் அணியின் சமூகவலைதளப் பக்கங்களை நிர்வகிப்பதற்கு என்று ஒவ்வொரு திமுக மாவட்டத்திலும் சமூக வலைதளங்களுக்கான துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகளிலும் நகர, பகுதி, பேரூர், வார்டுகளிலும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம். இப்படி, திமுக தலைவர் வழிகாட்டலில், தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளைக் கொண்ட வலுவான அணியாக விளங்குகிறது திமுக இளைஞர் அணி. இப்படி, 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பைக் கொண்டு செயல்படும் இளைஞர் அமைப்பு, இந்திய அளவில் திமுக இளைஞர் அணி மட்டுமே.

இப்படி, நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற திமுக தலைவர் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14ம் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடத்த இருக்கிறோம். 1.30 லட்சம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட நிகழ்ச்சியாக நடக்க இருக்கும் இந்த ‘வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரே மீண்டும் முதல்வர் ஆவார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்னும் வெற்றிச் செய்திக்கு அடித்தளமாக இந்த ‘இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.