Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட சீலை நீதிமன்ற உத்தரவை பெற்று அகற்றி சட்டப்பூர்வமாக்க பார்க்கிறீர்களா? டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, வீட்டை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாதபோது எப்படி சீல் வைக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், வீடு சீல் வைக்கப்படவில்லை. தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாமென்று நோட்டீஸ் மட்டும் தான் ஒட்டப்பட்டது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்?. தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவர் அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், அந்த நோட்டீஸை அகற்றிவிடுவதாக கூறினார். நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2014 முதல் 2021ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் படித்துக்கொண்டிருந்தார் என்று தெரிவித்தார். எந்த அடிப்படையில் சோதனை செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், நம்பத்தகுந்த தகவல்கள் வந்ததின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், யார் தகவல் கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா. ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.