Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கேரள வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரளாவின், கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்ட ஆட்சியர்கள், மீட்பு பணி மற்றும் சேத விவரங்கள் மற்றும் இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தது.