Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு..!!

சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 57 பேரில் இதுவரை 10 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டோரின் உடல்கள் மலப்புரம் மற்றும் நிலம்பூர் ஆறுகளில் மீட்கப்பட்டு வருகிறது. 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், நிலச்சரிவு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

நிலச்சரிவு தொடர்பாக சூமோட்டோ வழக்கு பதிவு செய்து விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலை கட்டுமானத் திட்ட விவரங்களை தருமாறு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. விவரங்களை தயார் செய்து வழங்குமாறு கேரள அரசு வழக்கறிஞருக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தி உள்ளது.