Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலாளி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் கிளை உத்தரவு, சிபிஐ முன் 6 பேர் ஆஜர்

மதுரை: போலீசார் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ முன் நேற்று 6 பேர் ஆஜராகினர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

நேற்று இவ்வழக்கில் 2வது முறையாக, மதுரை ஆத்திக்குளம் சிபிஐ அலுவலகத்தில் கோயில் ஊழியர் பிரவீண்குமார், அஜித்குமார் நண்பர் வினோத்குமார், தம்பி நவீன்குமார் ஆட்டோ டிரைவர் அருண்குமார் ஆகிய 4 பேரும் காலை 10.15 மணிக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகள் 4 பேரிடமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கிடைத்த தகவல்கள், திருப்புவனம் காவல் நிலைய விசாரணை தகவல்களுடன் சரி பார்க்கப்பட்டன.

தொடர்ந்து நேற்று மாலை அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோயில் உதவியாளர் பிரபு ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடமும் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐகோர்ட் கிளையில் விசாரணை: அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், ‘‘சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக ரூ.7.50 லட்சம் கொடுக்கப்பட்டது. அரசு வேலை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘அஜித்குமார் வழக்கின் சாட்சிகளான நவீன்குமார், அருண்குமார், சக்தீஸ்வரன், பிரவீண்குமார் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரிய மனுவை, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் 7 நாட்களுக்குள் விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, ஏற்கனவே ரூ.7.50 லட்சம் இழப்பீடாகவும், அரசு வேலை, இலவச வீட்டுமனை ஆகியவற்றையும் வழங்கி உள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, அரசுத் தரப்பில் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 28க்கு தள்ளி வைத்தனர்.

* 9 இடங்களில் சிபிஐ ஆய்வு அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக நேற்று காலை 11 மணிக்கு

4 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம், திருப்புவனம் மெயின்ரோட்டில் உள்ள வீடு, கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட 9 இடங்களில் ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். மேலும், அஜித்குமாரின் உடலை வாங்கிய சாட்சிகளான மடப்புரம் அப்பாச்சாமி, ஏனாதி ராமலிங்கம், கலுங்குப்பட்டி முருகன் உட்பட 5 பேரிடம், திருப்புவனம் கோர்ட்டில் நேற்று மாலை விசாரணை நடந்தது.

* டாக்டர்களிடம் விசாரணை

அஜித்குமாரை தனிப்படையினர் முதலில் கொண்டு சென்ற, சிவகங்கை - மதுரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் 4 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் நேற்று வந்தனர். மருத்துவமனையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து, சேகரித்துக் கொண்டனர். மேலும், அங்குள்ள டாக்டர்கள், நர்ஸ்களிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.