Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விழுப்புரம் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து சாவு: வீடியோ வைரல்; போலீசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்த குமார் மகன் மோகன்ராஜ் (16). திரு.வி.க. வீதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, பள்ளியில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. வகுப்பறையில் முதல் பென்ஞ்சில் உள்ள இருக்கையில் உட்கார்ந்தபோது புத்தகப்பையுடன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மாணவன் மோகன்ராஜ் எப்படி உயிரிழந்தார் என்பதை கண்டறிய அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் மோகன்ராஜ் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. மோகன்ராஜின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவரது தாய் ஆலத்தூர் கிராம உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.