சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாகத் துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கத்தினர், கிராமப் பணி அல்லாத அலுவலகப் பணிகள் ஆய்வு மாளிகை, புத்தக திருவிழா போன்ற பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம உதவியாளர்களை கிராம பணியை மட்டும் பார்க்க அனுமதிக்க வேண்டும், கிராம பணியை தவிர மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்று கீழ்நிலை அலுவலர்களுக்கு வழிகாட்டியும் அந்த உத்தரவை நடைமுறைபடுத்தாமல் தொடர்ந்து கிராம உதவியாளர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வரும் போக்கு சரியானது இல்லை, கிராம உதவியாளர்களின் பணிதன்மையை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி கிராம உதவியாளர்களை கிராம நிர்வாகப் பணிக்கு தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்ப்பது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிட மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இக்கடிதத்தை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புகையை உடன் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.