Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில், விக்கரவாண்டி இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதால் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் ராஜமாணிக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி,\\”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தான் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாகவும் முறையாக பரிசீலிக்காமல் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை. எனவே அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லாது. குறிப்பாக இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எங்களது தரப்பில் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். ஆனால் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.