Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை பலியான சம்பவத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விக்கிரவாண்டி பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கைதான பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிவுநீ்ர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து போலீஸார் சந்தேக மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பள்ளித் தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், விழுப்புரம் மாவட்டத்தி்ல் கனமழை பெய்த நிலையில் கழிவுநீர் தொட்டி சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததாகவும், இந்நிலையில் அந்த எல்கேஜி மாணவி வழிதவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பி்ல் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் மூவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, ‘‘பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியை ஆகிய மூவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.