Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை தொடர்ந்து அமமுகவும் போட்டியிட திட்டம்?

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 14ம் தேதி துவங்குகிறது. 21ம் ேததி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் இன்னும் 2 நாட்களில் துவங்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இறங்கின. இந்நிலையில் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்டதிலிருந்து திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் அவ்வளவாக ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ஏசாலம் பன்னீர் மற்றும் முன்னாள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர் சீட்டு கேட்டுள்ளனர். அதே நேரத்தில் பாமகவும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாஜவும் போட்டியிட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமமுகவும் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. அமமுக மாவட்ட, கிளை கழக நிர்வாகிகள் மூலம் கள ஆய்வு நடத்த டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். பாமக, அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.