Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு காவல் துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 23ம் தேதி நடத்த திட்டமிட்டு, இதற்காக அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தனர்.

அன்றைய தினமே கூடுதல் எஸ்பி திருமால் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாநாடு தொடர்பாக விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், 21 கேள்விகளை கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ேநாட்டீஸ் அனுப்பினார். மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், நிகழ்ச்சி நிரல், மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள், வாகன நிறுத்தம் ஏற்பாடு, அந்த இடத்துக்கான உரிமையாளர்கள் யார்? உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்கவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த விஜய் கட்சிக்கு நிபந்தனைகளுடன் காவல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அனுமதி கடிதம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம் இன்று மாலை வழங்கப்படும் என தெரிகிறது.