Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூரில் போலீசார் அதிரடி வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

*தங்கம், வெள்ளி, செல்போன் பறிமுதல்

வேலூர் :வேலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் கொணவட்டம் லட்சுமி நகரை சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது(60). இவர் கடந்த 7ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கஸ்பா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை சவரன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லேப்-டாப் ஆகியவை திருடுபோனது தெரிந்தது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக விரிஞ்சிபுரத்தை சேர்ந்த சூர்யா(19), வேலூர் கோட்டை பின்புறம் பகுதியில் உள்ள சம்பத் நகரை சேர்ந்த செல்வா(19) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் 3 கிலோ வெள்ளி பொருட்கள், லத்தேரி பகுதியில் பைக், கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு, விரிஞ்சிபுரம் பகுதியில் எவர்சில்வர் பொருட்களை திருடியது தெரிந்தது.

இந்த குற்றச்செயல்களுக்கு கொணவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சூர்யா, செல்வா, சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ₹20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பித்தளை பொருட்கள், 1 கிலோ 250 கிராம் வெள்ளி, 2 கிராம் தங்கம், ஒரு லேப்டாப், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.