Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணி லாட்ஜில் புகுந்து பயங்கரம்; காதல் மனைவியுடன் தங்கி இருந்த புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்ற கும்பல்

நாகை: வேளாங்கண்ணி லாட்ஜில் புகுந்து காதல் மனைவியுடன் தங்கி இருந்த புதுமாப்பிள்ளை, அவரது பெற்றோர் உள்பட 4 பேரை அரிவாளால் சரமாரி வெட்டி, தங்களது மகளை தரதரவென பெற்றோர் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாரா பகுதியை சேர்ந்தவர் டேனியல்(50). இவரது மனைவி கலையரசி(38). இவர்களது மகன் ராகுல்(22). இதே பகுதியை சேர்ந்தவர் ராஜாராவ். இவரது மகள் கீர்த்தனா(21). இவரும், ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவா சென்றனர். இதுகுறித்து இரு வீட்டாரும் தனித்தனியாக அங்குள்ள போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ராகுல், கீர்த்தனாவுடன் கோவாவில் இருப்பதை அறிந்த ராகுலின் பெற்றோர், உறவினர் பிரகாஷ்(38) ஆகியோர் கோவா சென்றனர். அங்கு மகனையும், அவரது காதலியையும் மீட்டு நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்தனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் வைத்து மகனுக்கும், அவர் காதலித்த பெண்ணுக்கும் அன்றே திருமணம் செய்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கீர்த்தனா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு ராகுலுக்கும், தனக்கும் திருமணம் முடிந்து விட்டது என கூறினார். உடனே அவர்கள் திருமணம் முடிந்து விட்டதா, இனி உங்களை பிரிக்க மாட்டோம். நீங்கள் வேளாங்கண்ணியில் இருங்கள். நாங்கள் வந்து பெங்களூருக்கு அழைத்து செல்கிறோம் என கூறினர். இதை நம்பி கீர்த்தனா, கணவர் ராகுல் மற்றும் அவரது பெற்றோர், உறவினர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர், அவரது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் வேளாங்கண்ணி விடுதிக்கு வந்தனர். திடீரென அவர்கள் ராகுல் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து கீர்த்தனாவை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தனர். இதை தடுத்த ராகுல், அவரது பெற்றோர், பிரகாஷ் ஆகியோரை சரமாரியாக தாக்கியதுடன் மறைத்து ைவத்திருந்த அரிவாளால் 4 பேரையும் வெட்டிவிட்டு கீர்த்தனாவை அடித்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்று விட்டனர்.

இதில் படுகாயமடைந்த ராகுல், பிரகாஷ், ராகுலின் பெற்றோர் ஆகிய 4 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த வென்கோப்ராவ்(33), புனித்குமார்(37), ராமநாத்ராவ்(40), விஜய்(35), ராஜாராவ்(43), கார்த்திக்(35), மஞ்சேஸ்வரி(36), சவிதா(39),கோனஹல்லி(30) ஆகிய 9 பேரை திருவாரூர் அருகே நேற்றிரவு தனிப்படை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.