சென்னை: வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ணநாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி உள்ளிட்ட பறவைகள் வந்து ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம். தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் அந்த ஏரியில் கணிசமான அளவு தண்ணீர் நிரம்பி ஏரியில் உள்ள மரங்களை சூழ்ந்து பறவைகளுக்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது.
இதனால், அங்கு ஆயிரக்கணக்கான நத்தை கொத்தி நாரை, 50க்கும் மேற்பட்ட பாம்பு தாரா, நூற்றுக்கும் மேற்பட்ட கூழைக்கடா, 200க்கும் மேற்பட்ட நீர் காகம், நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தற்பொழுது வந்து தங்கியுள்ளன. இதனால், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் பறவைகள் சீசன் தற்பொழுது தொடங்கியுள்ளது. புதிதாக வந்து தங்கியுள்ள நத்தை குத்தி நாரை பறவைகள் ஏரியில் உள்ள செடி, கொடிகளை எடுத்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பறவைகளை ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் பார்வையிட உள்ளதால் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


