வா வாத்தியார் திரைப்பட தயாரிப்புக்கு கடன் வாங்கிய விவகாரம் பணத்தை திரும்ப தருவது குறித்து இன்று பதில் அளிக்க வேண்டும்: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை 12ம் தேதி திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என்று கடந்த 2014ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திவாலா அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. எனவே, அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். வா வாத்தியார் படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடனாக பெற்ற பணத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் எப்போது செலுத்த உள்ளனர் என்பது குறித்தும், கணிசமான தொகையை சொத்தாட்சியரிடம் செலுத்துவது குறித்தும் நாளைக்குள் (இன்று) பதிலளிக்குமாறு ஸ்டுடியோ கீரின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


