Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இரு சமூகங்களுக்கிடையே மோதல் புகார் மீண்டும் ஆஜராகாத மதுரை ஆதீனம்: வயதாகிவிட்டதால் காணொலி மூலம் ஆஜராவதாக கோரிக்கை

சென்னை: நேரில் ஆஜராகாமல், விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராவதாக மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மே 2ம் தேதி காலை மதுரை ஆதீனம் வந்தபோது உளுந்தூர் பேட்டை பகுதியில் அவரது கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்படுத்த முயன்றதாக புகார் எழுந்தது. மேலும், மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விபத்து ஏற்படுத்தியவர்கள் தாடி வைத்திருந்ததாகவும் குல்லா அணிந்திருந்ததாகவும் புகார் தெரிவித்தார். நீண்ட தொலைவு துரத்தி வந்து சாலை தடுப்புகளை உடைத்து தங்கள் கார் மீது மோதியதாகவும் குற்றம்சாட்டினார். மதுரை ஆதீனத்தின் புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. அதில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக செல்வதும் இடதுபுறத்தில் இருந்து மற்றொரு கார் கட்டுப்பாடான வேகத்தில் வந்து கொண்டிருந்ததும் பதிவாகி இருந்தது.

மேலும் கட்டுப்பாடான வேகத்தில் வந்த காரை மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக கடப்பதும் இதையடுத்து கட்டுப்பாடான வேகத்தில் வந்த கார் பிரேக் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் அம்பலமானது. உண்மை வெளிவந்த நிலையில் ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், மதுரை ஆதீனத்தின் கருத்துகள் மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதோடு சைவ சமயத்தினரின் உணர்வுகளையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பான தகவல்களை மதுரை ஆதீனம் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் புகாரில் குற்றம்சாட்டி இருந்தார். இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை ஆதீனத்தின் கருத்துகள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொது தீமைக்கு வழிவகுக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஜூன் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் மதுரை ஆதீனம் ஆஜராகவில்லை. இதனால் கடந்த வாரம் மீண்டும் ஜூலை 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனாலும் அவர் ஆஜராகவில்லை. 2 முறை சம்மன் அனுப்பப்பட்ட பிறகும் ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் முதுமை, உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக மதுரை ஆதீனம் காவல் துறைக்கு கடிதம் அனுப்பினார். அதனை காவலர்கள் ஏற்க மறுத்த நிலையில், மதுரை ஆதீனம் நேரில் ஆஜராகவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று ஆஜராகாத நிலையில், அவருடைய வழக்கறிஞர் சேதுபதி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் ஆஜரானார்.