தூத்துக்குடியில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும்
*கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல் 270 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம் குறித்து கலெக்டர் இளம்பகவத் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை வரும் 15ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தாா. அதன்படி, அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 270 முகாம்கள் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி கடந்த 7ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1071 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இப்பணியை கண்காணித்திட 175 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை வட்டாட்சியர்கள் கண்காணித்திட வேண்டும் எனவும், முகாமிற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்என்றார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரபு (தூத்துக்குடி), மகாலட்சுமி (கோவில்பட்டி), சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


