திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் தென் தமிழக கடற்கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது.
அதன் பிறகு கடல் அலையில் சில நேரங்களில் சீற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடந்த 3 தினங்களாக அரிப்பு காரணமாக சுமார் 100 அடி நீளத்திற்கும், 3 அடி முதல் 6 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


