தெலங்கானாவில் மாமியாரை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்த புதுமாப்பிள்ளை கோடாரியால் வெட்டிக்கொலை: 2 மனைவிகள் ஆவேசம்
திருமலை: மாமியாரை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்த புதுமாப்பிள்ளை தங்களையும் வெட்டிக்கொல்ல முயன்றதால் அவரை 2 மனைவிகளும் சேர்ந்து கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டம் லிங்கலா கணபுரம் அருகே உள்ள எனபாவி கிராமத்தை சேர்ந்தவர் ஜுன்னுபாய் (50). இவரது மகள்கள் சிரிஷா (21), கவுரம்மா (19). ஜுன்னுபாயின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இதனால் தனது மகள்களுடன் ஜுன்னுபாய் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். அதேபகுதியில் ஜுன்னுபாயின் உடன் பிறந்த தம்பி கனகய்யா (30) வசித்து வந்தார். இந்நிலையில் தனது 2 மகள்களையும் தனது தம்பியான கனகய்யாவுக்கு கடந்த மார்ச் மாதம் ஜுன்னுபாய் திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணமானது முதல் சரிவர கனகய்யா வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தினசரி வீட்டில் ரகளை செய்து வந்தார். குறிப்பாக தனது 2 மனைவிகள் மற்றும் மாமியாரை அடிக்கடி அடித்து உதைத்து தகராறு செய்துள்ளார்.
இதேபோல் கடந்த மே மாதம் 18ம் தேதி மீண்டும் மதுபோதையில் மாமியாரிடம் ரகளையில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகய்யா, அங்கிருந்த கத்தியால் மாமியாரை சரமாரி வெட்டிக்கொன்றார். இதுதொடர்பான வழக்கில் போலீசார் கனகய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஜாமீனில் வந்த கனகய்யா, தனது 2 மனைவிகளை காண சென்றார். ஆனால் அவரது 2 மனைவிகளும், `எங்கள் தாயை கொன்ற உன்னுடன் எங்களால் இனி வாழ முடியாது’ எனக்கூறி அவரை ஏற்கமறுத்து விரட்டினர்.
இதனால் அங்கிருந்து வெளியேறிய கனகய்யா நேற்றுமுன்தினம் மீண்டும் மதுபோதையுடன் மனைவிகளை காண வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த கோடாரியால் 2 மனைவிகளையும் வெட்டிக்கொலை செய்ய முயன்றாராம். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த 2 மனைவிகளும் உடனே சுதாரித்துக்கொண்டு அந்த கோடாரியை பறித்து கணவரை சரமாரி வெட்டியுள்ளனர்.
இதில் கனகய்யா அதே இடத்தில் இறந்தார். பின்னர் சடலத்தை கொண்டுசென்று இரவோடு இரவாக அருகில் உள்ள கால்வாயில் வீசினர். இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். மேலும் கணவரை கொன்ற 2 மனைவிகளையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


