தொழில் நுட்பப் பணிகள் தேர்வு தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: தொழில் நுட்பப் பணிகள் தேர்வுக்கான தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வரும் 13ம் தேதி வரை கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய வேதியியலாளர் மற்றும் இளநிலை வேதியியலாளர், காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு), இளநிலை பகுப்பாய்வாளர், பண்டகக் காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. சரிபார்ப்புக்குப் பின்னர். சில சான்றிதழ்கள், ஆவணங்கள் முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல், குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தேர்வர்கள் வருகிற 13ம் தேதி வரை (இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை, ஆவணங்களைப் பதிவேற்றம், மீள் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தேர்வர்களின் பதிவெண்களை கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான குறிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல், அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மின்னஞ்சல், ஆகியவற்றின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை, ஆவணங்களை தேர்வாணைய இணையதளத்தில் அவர்களுடைய ஒருமுறை பதிவுக் கணக்கின் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில், அத்தகைய தேர்வர்களின் உரிமை கோரல்/விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


