Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணம் பெறலாம்; பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிரடி சலுகைகள்

* கோவிட் பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அது பரிசீலிக்கப்பட்டு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 1.4.2026 முதல் சரண் செய்யும் பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். இதன்மூலம் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

* அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டு தொகை ரூ.1 கோடி நிதி வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன. மகளின் உயர் கல்வி உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் வழங்கும். ஆயுள்காப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் வங்கிகள் வழங்கும்.

* தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழல்நுட்ப சாதனங்களை வழங்கிட திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.3,676 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.குழந்தைகள் நல மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்திடும் வகையில் வரும் நிதியாண்டில் ரூ.83 கோடி செலவில் வாடகைக் கட்டங்களில் இயங்கி வரும் 500 குழந்தைகள் நல மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் ரூ.3676 கோடி ஒதுக்கப்படும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு ரூ.8597 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பெற்றோர் இழந்த குழந்தைகள் 18 வயது வரை பள்ளி படிப்பு தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை

மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50 ஆயிரம் குடும்பங்களில், குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உவித்தொகை வழங்கப்படும். பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.