Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காசா இனப் படுகொலையை கண்டித்து, வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, எழும்பூரில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து நேற்று நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதையும் இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதநேய பண்போடு நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து இந்த கண்டன கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அமைப்பு எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது. எழுச்சியோடு என்று சொல்வதைவிட உணர்ச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவிற்கும், குறிப்பாக, மாநில செயலாளர் சண்முகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல; மனிதநேய சிந்தனை கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை கண்டித்துக் கொண்டிருக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். இதுதான் இந்த கண்டன இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது. கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் - 17 ஆயிரம் குழந்தைகள் - 175 பத்திரிகையாளர்கள் - 125 ஐ.நா. ஊழியர்கள் என்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்; ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஜூன் மாதத்தில், பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது, 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறித்திருக்கக்கூடிய இந்த கொடூரத்தை பார்த்து, எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையான இந்த அநீதிகளைக் கண்டிக்காமல் - அமைதியாக கடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா?

சில நாட்களுக்கு முன்னால், மற்றொரு செய்தி வந்தது. காசாவில் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க, உணவுப் பொருட்கள் - மருந்துகள் - குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக் கொண்டு சென்ற 47 நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்களை தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல். பன்னாட்டு சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா? காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்த கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது. இதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றியத்தை ஆளக்கூடிய பா.ஜ. அரசு வேகமாக மேற்கொள்ளவேண்டும் என்று கூட்டத்தின் மூலமாக எல்லோருடைய சார்பிலும் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்றிய பா.ஜ. அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காசாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும், இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மனிதாபிமானம் இருக்கும் எல்லோரும் இதை வேறொரு நாட்டு விவகாரமாக நாம் பார்க்கக் கூடாது. உலக அமைதி என்பது, எல்லோருக்கும் பொதுவானது. மனித உரிமை என்பதை எல்லோரும் காக்க வேண்டும். மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது. இந்த மூன்றையும் காக்கின்ற கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு - மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும், உடனடியாக முழுமையாக வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது - மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனைகள் - உறுதிமொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். வருகிற 14ம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்;

அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். இந்த கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அப்பாவி மக்கள் உயிரிழப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற என் விருப்பத்தை கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு பேசினார். இந்த ஆர்ப்பாட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தி.க. தலைவர் வீரமணி, அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தவாக தலைவர் வேல்முருகன்,தமிமுன் அன்சாரி, ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.