தமிழகம் முழுவதும் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது: வீடு வீடாக சென்று வழங்கினர்
சென்னை: தமிழகத்தில் 1 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தை நேற்று முதல் விநியோகம் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்குவார்கள். மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தன்னார்வலர்கள், விண்ணப்பங்களை தமிழகம் முழுவதும் நேற்று முதல் வீடு வீடாக சென்று வழங்கும் பணியை தொடங்கினர். இந்த பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் அரசின் 40க்கும் மேற்பட்ட சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இதையடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்காக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் வழங்கலாம். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மு காம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


