Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் மாணவரை சேர்த்தால் ரூ.5,000 டெபாசிட்: ஊட்டி அருகே ஆசிரியர்கள் நூதன திட்டம்

ஊட்டி: ஊட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க 1ம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அறிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிளூர் கோக்காலாட அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஆனால், இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் முயற்சியால் மீண்டும் இப்பள்ளி 3 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதற்காக தற்போது பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை டெபாசிட் செலுத்துவதாக உறுதியளித்து, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ரூ.5 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. 7ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிரமும், 8ம் வகுப்பிற்கு ரூ.3 ஆயிரமும், 9ம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்த மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்து செல்லும்போது, அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது போன்று கீளூர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்து வரும் முயற்சிக்கு தற்போது இப்பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா மற்றும் வள்ளி ஆகியோர் சாம்ராஜ், கைகாட்டி, மேலூர் போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாட்டிலேயே இது போன்று மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.