சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 100 டிகிரி வரையும், கடலோர பகுதிகளில் 93 டிகிரி வரையும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தவிர சென்னை, தர்மபுரி, ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3டிகிரி செல்சியஸ் வரையும், வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தெற்கு கேரளா, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று தென் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 28ம் தேதியும் இதே நிலை நீடிக்கும். 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியை ஒட்டியும் இருக்கும்.