Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு திசை காற்று மாறுபாடு; தமிழகத்தில் 10ம்தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவமழை நீடித்து வருவதை அடுத்து மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக 90 மிமீ முதல் 100 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இரவு மழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 10ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா , அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 7ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.