Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை தொடங்கப்பட்டு 7 நாட்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை கடந்தது: திருச்சுழி சட்டமன்ற தொகுதி முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடங்கப்பட்டு 7 நாட்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி 54,310 புதிய உறுப்பினர்களை சேர்த்து முதலிடத்தை பிடித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் மண் மொழி மானம் காக்க, “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது.

இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த 3ம் தேதி முதல் வீடு,வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை நேரடியாக மேற்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னணியினர் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். ஒருவர் விடாமல் அனைவரது வீடுகளுக்கு சென்று பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை சந்திக்கும் போது திமுக அரசின் சாதனை, திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள மாநில உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து கூறி வருகின்றனர். சந்திப்பின் போது ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைத்தும் வருகின்றனர். ஒரு மினி தேர்தல் பிரசாரம் போலவே திமுகவினர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் கண்காணித்து வருகிறார். இதுதொடர்பாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இன்று (நேற்று) காலை திருவாரூரில் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன். தமிழ்நாடு முழுவதுடன் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் திமுகவில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது திருச்சுழி சட்டமன்றத் தொகுதி. மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம் வெற்றி விழாவில் சந்திப்போம்!இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் 7ம் நாள் முடிவில் (நேற்று முன்தினம் இரவு வரை) 50 லட்சத்து 62 ஆயிரம் உறுப்பினர்கள் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரணியில் தமிழ்நாடு பயணம் மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. அது மட்டுமல்லாமல் திமுக சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.