லார்ட்ஸ் டெஸ்ட்டில் 2 விக்கெட் எடுத்து அசத்தல்; பாட் கம்மின்ஸ் ஆலோசனை எனக்கு உதவியது: நிதிஷ்குமார் ரெட்டி பேட்டி
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் முதல் போட்டியில் இங்கிலாந்து, 2வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 1-1 என சமநிலையில் இருக்க 3வது டெஸ்ட் லார்ட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 23, ஜாக் கிராலி 18 ரன்னிலும் நிதிஷ்குமார் ரெட்டி பந்தில் கேட்ச் ஆகினர். பின்னர் வந்த ஒல்லிபோப் 44 ரன்னில ஜடேஜா பந்தில் விக்கெட்டை இழந்தார். ஹாரி புரூக்கை 11 ரன்னில் பும்ரா போல்டாக்கினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதனிடையே நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் நிதிஷ்குமார் ரெட்டி கூறியதாவது: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, எனது பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்தேன்.
இது எனது முதல் சுற்றுப்பயணம் என்பதால் ஆஸ்திரேலியாவிற்கும், இங்கிலாந்துக்கும் என்ன வித்தியாசம் என்று நான் எனது ஐபிஎல் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் கேட்டேன். ``இது ஒரு வித்தியாசமான மாற்றமாக இருக்காது, ஆனால் நீங்கள் வானிலை நிலவரங்களைப் பார்த்து உங்கள் ஆட்டத்தை விளையாடுங்கள்’’ என்றார். அவரின் அறிவுரை எனக்கு உதவியது. கோச், மோர்னே மோர்கலுடன் பணிபுரிவது எனக்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் இரண்டு வாரங்களாக என்னுடன் பணியாற்றி வருகிறார். எனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தைக் காண்கிறோம். மேலும் அவருடன் பணிபுரிவதை நான் மிகவும் ரசிக்கிறேன். பவுலிங்கில் நிலையாக இருக்க விரும்புகிறேன். அதற்காக 2 ஆண்டுகளாக நான் கடுமையாக உழைத்து வருகிறேன்.
அணி என்னிடமிருந்து என்ன விரும்புகிறதோ அவ்வாறு பந்து வீச விரும்புகிறேன். அதை நான் சரியாகச் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இன்று நான் பந்துவீசிய விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நாளையும் தொடர்ந்து சில விக்கெட்டுகளைப் பெற விரும்புகிறேன்’’ என்றார். 5 விக்கெட் வீழ்த்தி லார்ட்ஸ் கவுரவ பலகையில் இடம் பெறுவீர்களா என்ற கேள்விக்கு, ``நான் நிறைய கடின உழைப்பைச் செய்து வருகிறேன், நான் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கவுரவ பலகையில் இடம் பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று பதிலளித்தார்.