Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தைவானை கைப்பற்ற தீவிரம் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு சீனாவால் உடனடி ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை

சிங்கப்பூர்: இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு சீனாவால் உடனடி ஆபத்துகள் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறி உள்ளார். சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஹெக்சேத் கூறியதாவது: தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா தனது ராணுவத்தை கட்டமைப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, அதற்காக ஒவ்வொரு நாளும் தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறது.

இதனால் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நடப்பு நாடுகளுக்கு சீனாவால் உடனடி அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆனாலும், சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள நட்பு நாடுகளை அமெரிக்கா தனிமையில் விட்டு விடாது. அதே சமயம், அவர்களும் தங்களின் சொந்த பாதுகாப்பிற்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும். இந்தோ பசிபிக் நாடுகள் தங்கள் ஜிடிபியில் 5 சதவீதத்தை பாதுகாப்பு செலவினங்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும்’’ என்றார்.

இதை மறுத்துள்ள சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் ஹு கேங்பெங், ‘‘ஹெக்சேத் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவரது பேச்சு முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை சீர்குலைக்க பிரச்னையை அமெரிக்கா தூண்டுகிறது. மோதலை ஏற்படுத்த பார்க்கிறது. அதைத் தவிர வேறொன்றுமில்லை’’ என்றார்.