Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தாசில்தார் பதவி உயர்வு விவகாரம் 3 கலெக்டர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் துணை தாசில்தார்களுக்கு, தாசில்தார் பதவி உயர்வு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் எஸ்.சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் வேலு உள்பட துணை தாசில்தார்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறையில் தாசில்தார் பதவி உயர்வு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துணை தாசில்தார்கள் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், வக்கீல் எம்.லோகநாதன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு வரும் 27ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம், அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் அன்று ஆஜராகவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வாய்மொழியாக தெரிவித்தார்.