வேளச்சேரி: வேளச்சேரியில் இருந்து தரமணிக்கு கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து, 100 அடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தேவதர்ஷன் (19). இவர், வேளச்சேரியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு வணிகவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வேளச்சேரியில் இருந்து 100 அடி சாலை வழியாக தரமணிக்கு பைக்கில் கல்லூரி மாணவர் தேவதர்ஷன் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை நடுவில் இருந்த தடுப்பில் வேகமாக மோதி கவிழ்ந்தது.
இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் தேவதர்ஷன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கல்லூரி மாணவர் தேவதர்ஷனின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.