Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்: பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை

ஓசூர்: ஓசூர் அருகே வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 3 வயதில் அர்ஜூன் என்ற மகன் உள்ளான். இவர்கள் குடும்பத்துடன் ஓசூரை அடுத்த நாகொண்டபள்ளியில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக உறவினரின் வீட்டுக்கு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தெருநாய், சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் அலறி துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தெருநாயை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர்.

நாய் கடித்ததில் சிறுவன் அர்ஜூனுக்கு தலை, கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு கதறி அழுதான். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு சுமார் 10 தையல்கள் போடப்பட்டுள்ளது. வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.