தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் 23ம் தேதி கொடைக்கானலில் நடக்கிறது: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், வரும் 23ம்தேதி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், ஓட்டல் கோடை இன்டர்நேஷனலில் நடைபெற உள்ளது. பேரமைப்பு மாநிலத் தலைவரான நான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறேன். மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்துகிறார். மதுராந்தகத்தில் நடைபெற்ற மே-5, 42-வது வணிகர் தின மாநில மாநாட்டின் வரவுசெலவு கணக்குகள் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தாக்கல் செய்ய உள்ளனர்.
இச்செயற்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று, பேரமைப்பின் வருங்கால நடவடிக்கைகளுக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்திடவும், வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உரிய வழிமுறைகளை காணுதல் போன்றவை சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


