Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வருகிற ஜூன் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தங்கள் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயம் ஆகும்.

இந்தக் கோயிலில் முன்னதாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 18 வருடங்கள் கடந்த நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் மே 31ம் தேதியிலிருந்து யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நிர்வாக அதிகாரி முத்து மணிகண்டன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

கும்பாபிஷேத்தின் போது பயன்படுத்துவதற்காக காசி, ராமேஸ்வரம், தங்கை தீர்த்தம், திருச்செந்தூர், சபரிமலை, சதுரகிரி, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் உட்பட சுமார் பத்து புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டுள்ளது. இது கும்பாபிஷேக அன்று பயன்படுத்தப்பட உள்ளது. கோயிலில் தற்போது யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்காக 43 அக்னி குண்டங்கள், 23 வேதிகைகள் அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.