Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடுக்கடலில் மீனவர்களை தாக்கி வலைகள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து மூர்த்தி (50) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வராஜ் (55), விஜயகுமார் (40), சேகர் (60) ஆகிய 4 பேரும் முத்துவேல் (43) என்பவருக்கு சொந்தமான படகில் முத்துவேல், தனபால் (40), விஸ்வநாதன் (32) பிரகாஷ் (30) ஆகிய 4 பேரும் ரகுமான் (31) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வம் (45), அஜீத் (27), பாண்டியராஜ் (28), சஞ்சய் (26), மதேஸ் (25) ஆகிய 6 பேரும் என மொத்தம் 3 பைபர் படகில் 14 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு 4 பைபர் படகில் வந்த 14 இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பைபர் படகையும் வழிமறித்து மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள 850 கிலோ மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவி, செல்போன், நூறு லிட்டர் டீசல் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். கடற்கொள்ளையர்கள் கத்தி, மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் காயம் அடைந்த செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய மூன்று மீனவர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.