Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூரிய ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான 2 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்

பெங்களூரு: பிரோபா 3 செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி-59 இன்று மாலை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான இஎஸ்ஏ, சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக பிரோபா 3 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.

550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (டிச.4ம் தேதி)) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து செயற்கைகோளை ராக்கெட்டில் பொருத்துவது, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதலுக்காக இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கவுன்ட்டவுன் முடிவதற்கு முன்பாக புரோபா-3 செயற்கைகோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது. பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஏவுதல் நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.

செயற்கைகோளின் உந்துவிசை கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த உந்துவிசை கலன் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை கட்டுப்பாட்டு துணை அமைப்பின் ஒரு பகுதி. இது விண்வெளியில் நோக்குநிலை மற்றும் சுட்டிக்காட்டுதலை கணிக்க பயன்படுகிறது. இன்று மாலை 4.04 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று சரியாக மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.