Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக புகார்: கோவிட் தடுப்பூசிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தடுப்பூசியால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இதனை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதுபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுநல மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டது. அதில், ‘கோவிட் தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது. அந்த தடுப்பூசி பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள். இந்த மனுவின் சாராம்சம் ஒன்றுமில்லை. பரபரப்பை ஏற்படுத்துவதற்காவே மனு தாக்கல் செய்யப்பட்டது போன்று உள்ளது.

கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், அது எதுபோன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.