Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரித்து முடிப்பதற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாள், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மனு மீது தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாகக் காட்ட கூடாது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, நான்கு மாத அவகாசம் கோரியிருக்கிறார். அதற்குள் வழக்கை முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது. எனவே 4 மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.