Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாட்டின் ரகசியம் சார்ந்த பிரச்னைகளை அண்ணாமலையை வைத்து வெளியிடுவதா?: தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி தலைவர் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை:

கச்சத்தீவு ஒப்பந்தம் போன்ற நாட்டின் ரகசியம் சார்ந்த பிரச்னைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது. ஆனால், அண்ணாமலையை வைத்து வெளியிடச் செய்திருக்கிறார்கள். அதற்கு பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் முட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

அதேசமயம், இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருப்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டால் பதில் தருவார்களா?.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கீழ்த்தரமான அரசியலை செய்யும் இவர்களால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் முதுகுக்குப் பின்னே ஆயிரம் அழுக்குகள் இருக்கின்றன. அதைவிட்டு, கச்சத்தீவை கையில் எடுத்துத் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

இந்தியாவின் பகுதிக்குள் ஊடுருவி 30 இடங்களில் பெயர் வைக்கிறது சீனா. அதுவரை பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மக்கள் முன் எழுந்துள்ள இந்த கேள்விக்குப் பதில் தராவிட்டால், மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்.