Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பள்ளிக் கல்வித்துறை வெளியீடு பள்ளிகளில் சாதி வன்முறைகள் தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை: பள்ளி மாணவர்கள் இடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாவதை தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

* அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும் ஊழியர்களும் சமூகப் பிரச்னைகள், சாதி பாகுபாடு மற்றும் பாலியல் வன்முறை, துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள், பல்வேறு சட்டங்கள் தொடர்பாக தாங்களும், தலைமை ஆசிரியர் நடத்தும் கூட்டத்தில் கலந்தாலோசித்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க திட்டமிட வேண்டும்.

* மாணவர்களின் சாதிப்பெயர்களை மந்தணமாக வைத்திருக்க வேண்டும்.

* மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த விவரங்களும் இருக்கக் கூடாது.

* எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்கு காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துகளை தெரிவிக்க கூடாது.

* மாணவர்கள் கைகளில் பலநிற மணிக்கட்டுப் பட்டைகள், மோதிரங்கள், அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியும் வகையில் அணிவதை தடை செய்ய வேண்டும்.

* மாணவர்கள் தங்கள் சாதியை குறிக்கும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றத் தவறினால் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதுடன், கூடுதலாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மாணவர்கள் இடையே சாதிப்பாகுபாடு பிரச்னைகளை தீர்க்க முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல்துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைத்தல் வேண்டும்.