Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் டிவிஷன் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

சென்னை: சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் டிவிஷன் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது தமிழக காவல்துறையினருக்கு எந்த தனிப்பட்ட பகைமை உணர்வு இல்லை எனவும் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கடந்த மாதம் 4ம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பல்வேறு ஊர்களின் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மாதம்12ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை பொறுத்தவரை 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3வது நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. நேற்று பதில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில் மீண்டும் இன்று இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் இவ்வழக்கை தான் தொடர்ந்து விசாரிப்பதற்குப்பதிலாக, ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கக்கூடிய டிவிஷன் அமர்வுக்கு மாற்றம் செய்வதாகவும், இது தொடர்பாக இந்த வலக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது வழக்கறிஞர் தரப்பில் வழக்கை தள்ளிவைப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்று டிவிஷன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் சவுக்கு சங்கரின் கைது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, சவுக்கு சங்கர் மீது தமிழக காவல்துறையினருக்கு எந்த தனிப்பட்ட பகைமை உணர்வு இல்லை எனவும் காவல் ஆணையர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.