Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத்தில் இருந்து இறக்குமதியால் உப்பு விலை கடும் வீழ்ச்சி: உற்பத்தியாளர்கள் கவலை

தூத்துக்குடி: இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு வேம்பார் முதல் பெரியதாழை வரையில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்த உப்புத் தொழிலில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் முதல் 30 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. . கடந்த 2 மாதங்களாக அதிகளவு மழை பெய்து வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக குஜராத்தில் இருந்து கப்பல்களிலும், சரக்கு ரயில்கள் மூலமாகவும் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 3 லட்சம் டன்கள் வரையில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக உப்பு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் உப்பு விலை குறைவு ஏற்பட்டு உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களுக்கு கடந்த சில வாரங்களாக இயற்கை கைகொடுத்துள்ளது. பெரியளவில் மழை இல்லாமலும், மேகக் காற்று அதிகமாக வீசி வருவதாலும், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இருப்பினும் எதிர்பார்த்த விலை உள்ளூர் உப்புக்கு இல்லை என்ற நிலை உள்ளது. இந்த உப்பு உற்பத்தி சீசனில் ஒரு டன் உப்பு சுமார் ரூ.3500 முதல் ரூ.4 ஆயிரம் வரையில் விற்பனையாவது வழக்கம். ஆனால் இந்த குஜராத் உப்பு இறக்குமதியால் தற்போது இங்குள்ள உப்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,800 வரையில் மட்டுமே விற்பனையாகிறது.