Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த சித்த மருத்துவ பல்கலை மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் ஆர்.என்.ரவி

சென்னை: கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக கிடப்பிலேயே வைத்திருந்தார். பின்னர், சில திருத்தங்களை செய்யக்கோரி மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ‘‘ஆளுநர், அரசமைப்புச் சட்டப்படி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், இந்த சட்ட முன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தங்கள் கருத்தை தெரிவித்து, பேரவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, தன்னுடைய கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கும், சட்ட விதிகளுக்கும் முரணானது. சட்ட முன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவோ விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்கள் குறித்து வாக்கெடுப்பு கோரவோ அதிகாரம் உள்ளது. மசோதா, பேரவையில் நிறைவேற்றப்படும்போது அதன் மீது கருத்துகள் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, சட்ட மசோதா குறித்து ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை இந்த பேரவை ஏற்றுக் கொள்ள இயலாது. கருத்துகள் அடங்கிய செய்தி அவைக்குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்க மாட்டார்கள் என்ற காரணத்தால், அந்த கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை’’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக முன்மொழிவை, பேரவையில் ஆளுநர் ஆய்வு செய்யக்கோரி அவர் வைத்த கருத்துகளை சட்டப்பேரவை நிராகரிக்கிறது, அந்த தீர்மானத்தை நான் பேரவையில் முன்மொழிகிறேன் என்று முதல்வர் கூறினார். ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறப்பட்டதுடன், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா ஆளுநருக்கு எந்த திருத்தமும் இல்லாமல் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.