Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காலஞ்சென்ற ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..!!

சென்னை: காலஞ்சென்ற ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார்.

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர். ஆர்.எம்.வீரப்பனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அரசியலில் மட்டுமின்றி திரைத்துரையிலும் ஆர்.எம்.வீரப்பன் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள ஆர்.எம்.வீ. உடலுக்கு முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் உடல் தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆர்.எம்.வீரப்பனின் மகன்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததற்கு பிறகாக நாளைய தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது.