Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர மீன்கடைகள் அகற்றம்: திருவள்ளூர் நகராட்சி நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன்கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சாலையை தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நகரின் மையப்பகுதியான செட்டித் தெரு, ஜெ.என். சாலை பகுதிகளில் சாலையோரத்தில் கடைகள் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி உத்தரவின்படி, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சென்று சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 20க்கும்மேற்பட்ட மீன் கடைகளை அப்புறப்படுத்தி சாலையை சுத்தப்படுத்தினர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்துபொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘’இனிவரும் காலங்களில் சாலையோரத்தில் மீன் கடை, இறைச்சி கடைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி தெரிவித்துள்ளார். ‘’நகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றையும் அகற்றி திருவள்ளூர் நகரில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலும் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.