பதிவுத்துறையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு கூடுதல் பதிவுத்துறை தலைவராக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக பதிவுத்துறையில் 3 கூடுதல் பதிவுத்துறை தலைவர் பதவிகள் இருந்தன. அதில் ஒருவர் மட்டுமே நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதனால் 2 இடங்கள் காலியாக இருந்தன. இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அதைத் தொடர்ந்து, துணை பதிவுத்துறை தலைவர்களாக உள்ள சுதாமல்யா, ஜனார்த்தனம் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவர்கள் இருவருக்கும் கூடுதல் பதிவுத்துறை தலைவராக பதவி உயர்வு வழங்க தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் உத்தரவிட்டுள்ளார்.
முத்திரை மற்றும் பதிவு பிரிவின் கூடுதல் பதிவுத்துறை தலைவராக இருந்த நல்லசிவன் மாற்றப்பட்டு, வழிகாட்டி கூடுதல் பதிவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளராக இருந்த சுதாமல்யா, முத்திரை மற்றும் பதிவுத்துறை கூடுதல் பதிவுத்துறை தலைவராகவும், புலனாய்வுப் பிரிவு கூடுதல் பதிவுத்துறை தலைவராக ஜனார்த்தனம் நியிமக்கப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்.
பதிவுத்துறை துணை தலைவராக இருந்த சுதாமல்யா, நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடியவர். பதிவுத்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பதிவுத்துறை தலைவராக இருக்கும் ஆலிவர் பொன்ராஜ், தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு ஏற்பாடமல் தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், கூடுதல் பதிவுத்துறை தலைவராக நேர்மையான அதிகாரி சுதாமல்யா நியமிக்கப்பட்டுள்ளது, பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.