Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மறு வாக்குப்பதிவு நடந்த 11 வாக்குச்சாவடியில் 82% ஓட்டுப்பதிவு: காங்கிரஸ் முகவருக்கு போனில் மிரட்டல்

இம்பால்: மணிப்பூரில் மறு வாக்குப்பதிவு நடந்த 11 வாக்குச்சாவடியில் 82% ஓட்டுப்பதிவு நடந்ததாக அதிகாரிகள் கூறினர். வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிகளில் கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. அப்போது சில வாக்குச்சாவடிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு, வாக்குச் சாவடிகளில் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்துதல், வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. அதனால் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று 11 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ேநற்று நடந்த வாக்குப்பதிவின் போது எந்த விதமான கலவரமோ வன்முறையோ நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மறுவாக்குப்பதிவு நடந்த 11 வாக்குச் சாவடிகளிலும் மொத்தம் 81.6 சதவீத வாக்குகள் பதிவாகின. எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் அசம்பாவித சம்பவமோ, வன்முறையோ நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மொய்ராங்கம்பு சஜேப்பில் உள்ள வாக்குச்சாவடியை காலி செய்யுமாறு, வாக்குச்சாவடி முகவர்களை அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் மிரட்டியதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.