Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமர் கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம்: கட்டுமானக் குழு தகவல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானக்குழுவின் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் தர்பார் உட்பட 8 கோயில்களில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய்மையான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வரிகளை தவிர்த்து தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.50கோடியாகும். கோயிலின் தரை தளத்தில் உள்ள கதவுகள் மற்றும் ராமரின் கீரிடத்திலும் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேஷாவதர் கோயிலில் தங்க வேலைகள் இன்னும் நடந்து வருகின்றது. ராமர் கோயிலின் முக்கிய கட்டமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அருங்காட்சியகம், ஆடிடோரியம் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கோயில் வளாகத்தின் பிற பகுதிகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும். ராமர் தர்பார் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ராமர் தர்பாரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

* வைரம் பதித்த கிரீடம் நன்கொடை

விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய பொருளாளர் தினேஷ் நெவாடியா கூறுகையில், ‘‘குஜராத்தை சேர்ந்த புகழ்பெற்ற நகை நிறுவனத்தின் உரிமையாளர் , அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூரி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளைக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட 11 கிரீடங்கள், ஒரு தங்க வில் மற்றும் அம்பு 30கிலோ வெள்ளி, 300கிராம் தங்கம் மற்றும் மாணிக்கங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்” என்றார்.