ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை தலைமையிடமாக என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்மான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்கு சொந்தமானது. என். ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.
என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு இயக்குநர்களாக என்.ராமலிங்கத்தின் மகன்களான சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட மாநில முழுவதும் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுகூனம் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பெரிய அளவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை பெரிய அளவில் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 23ம் நிதியாண்டை விட குறைத்து 24ம் நிதியாண்டில் கணக்கு காட்டியது தான் அந்த குற்றச்சாட்டு. ஆனால் 2023-24ம் நிதியாண்டில் பல கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் மூலம் வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று ஒரே நேரத்தில் பெங்களூரு, கோவை அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செட்டிபாளையத்தில் உள்ள என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் கிளை நிறுவனங்கள், என்.ராமலிங்கம் வீடு, மகன்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
காங்கேயம், அந்தியூரில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ஈரோட்டில் ராமலிங்கத்தின் நிறுவனம் மட்டுமின்றி ஆர்.பி.பி., ஜேபிஎல் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.


