Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது.

ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்கும். தற்போது, திமுகவில் அப்துல்லா, வில்சன், சண்முகம், வைகோ (மதிமுக) ஆகியோரும், அதிமுக சார்பில் சந்திரசேகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகின்றன.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஜுன்2ம் தேதி முதல் ஜுன்9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், 10ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 12ம் தேதி வரை வாபஸ் வாங்கலாம். ஜுன் 19ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்குமாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களை சந்தித்து பேசியதாவது:

அதிமுக ஆட்சிமன்றத்தில் பரிசீலித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவருமான தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக தலைமையிலான தேமுதிக கூட்டணி தொடரும். 2026ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்கப்படும். தேமுதிக ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, கடந்த 28ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அதிமுக தங்களின் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிர்பந்தத்திற்கு இடமில்லை;

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் போட்டியில் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இடியாப்ப சிக்கலில் இருந்து வந்தது. குறிப்பாக, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கான சீட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. தேமுதிக தரப்பில் பல இடங்களில் எங்களுடன் செய்த ஒப்பந்தத்தின் படி, சீட்டு வழங்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து நிர்பந்தம் செய்து வந்தார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை அதிமுகவை நிர்பந்தம் செய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.